ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது

புழலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 27சவரன் நகை மீட்பு.

Update: 2023-05-14 01:30 GMT
கைது செய்யப்பட்ட தினகரன் மற்றும் செல்வகுமார், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 27 சவரன் நகை.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் அடுத்த டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குணசேகரன். இவரது பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து கடந்த பிப்ரவரி மாதம் 18சவரன் தங்க நகைகள், வெள்ளி பூஜை பொருட்கள், 1லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் எண்ணூரை சேர்ந்த மோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.

மோகன் அளித்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலியை சேர்ந்த தினகரன், ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27சவரன் தங்க நகைகளும், 250கிராம் வெள்ளி பொருட்கள், மற்றும் 36500ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் புழல் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.




Tags:    

Similar News