திருவள்ளூர்: கொரோனா தொற்றால் கணவனை இழந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை..!

திருவள்ளூர், தேவி மீனாட்சி நகர் பகுதியில் கொரோனா தொற்றால் கணவனை இழந்த துக்கத்தில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை.

Update: 2021-06-16 14:51 GMT

திருவள்ளூர் தேவி மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் பிரஷாந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி பிரஷாந்த் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். இதனால் மனவேதனை அடைந்த அவரது மனைவி 65 வயது மூதாட்டி தன்னுடைய கணவர் இறந்த நாள் முதல் துக்கம் தாங்கமுடியாமல் வருத்தத்தில் இருந்து வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும் அவர் தன்னுடைய கணவரை நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த மூதாட்டி கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து விட்டார். இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News