எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 4 ஆண்டு நினைவு நாள்

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தாமரைப்பாக்கத்தில் அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2024-09-25 12:45 GMT

எஸ் பி பாலசுப்பிரமணி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி செல்பி எடுத்துக் கொண்ட போது.

பாடும் நிலா எஸ்பிபியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள். கட்டுமான பணிகள் காரணமாக நினைவிடத்திற்குள் பொதுமக்களுக்கு நீண்ட நேரம் அனுமதி மறுப்பு. பிற்பகல் அனுமதியளித்த பிறகு ரசிகர்கள் அஞ்சலி.

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடம் அமைந்துள்ளது. எஸ்பிபியின் 4ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று பல்வேறு ஊர்களில் இருந்து ரசிகர்கள் எஸ்பிபி நினைவிடத்திற்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்த வந்தனர்.

எஸ்பிபி நினைவிடம் கட்டுமான பணிகள் காரணமாக நினைவிடத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முறையான அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் ரசிகர்கள் ஏமாற்றம் தவிர்க்கப்பட்டிருக்கும் என வேதனை தெரிவித்தனர்.

எஸ்பிபி நினைவிட பராமரிப்பாளர்கள் முறையாக அறிவிப்பு செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தது தொடர்பாக செய்தியாளர்கள் செய்தி சேகரித்து ரசிகர்களின் குறைகளை பேட்டி எடுத்தனர். இதனையடுத்து பிற்பகலில் சிறிது நேரம் ரசிகர்களை உள்ளே அனுமதித்தனர். இதனையடுத்து எஸ்பிபி நினைவிடத்தின் உள்ளே சென்ற ரசிகர்கள் எஸ்பிபியின் சமாதியின் மேல் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்கிருந்தபடி செல்பி எடுத்து கொண்டனர்.

Tags:    

Similar News