திருவள்ளூரில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21 விவசாயிகளுக்கு ரூ.11,07,475 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.

Update: 2024-06-27 09:30 GMT

திருவள்ளூரில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக  விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடந்தது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய இனமானபசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில் ஆயக்கட்டு. இறவைப் பாசனப் பகுதிகளில், திருவள்ளுர் மாவட்டத்தில் 12000 ஏக்கரில்ரூ.1.20 கோடி மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டமிட்டு விவசாயிகளுக்கு தற்பொது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் ஒருகிலோ முழு விலையாக ரூ.99.50 இதில் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி (KAVIADP) திட்டத்தின் கீழ் 2024-25 ஆண்டில் 104 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு தரிசுநில தொகுப்புகள் கண்டறியும் பணி நடைப்பெற்று வருகிறது. அரசு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், ஏரி,குளங்கள், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், தூர்வாருவதற்கும் மற்றும் இதர பணிகளுக்கும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பொதுப்பணித்துறை மற்றும் நில அளவீட்டு துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து கூட்டு புலத்தணிக்கை செய்து ஆய்வறிக்கையின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசு நிலங்கள், நீர்நிலைகள், வரத்து கால்வாய்களில் பயிர் ஆக்கிரமிப்பு அறியப்பட்டு துறைகள் மூலம் நடவடிக்கை எடுத்துள்ள பட்சத்தில் அதனை புறக்கணித்து மீண்டும் தனி நபர் ஆக்கிரமிப்பு அமையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனிநபர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

பின்னர் 5 விவசாயிகளுக்கு தலா ரூ.1990 வீதம் ரூ.9950 மதிப்பீட்டில் பசுந்தாள் உரம், 2 விவசாயிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1000 மதிப்பீட்டில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டமும், 2 விவசாயிகளுக்கு மன்வள அட்டையும், 1 விவசாயிக்கு ரூ.4000 மதிப்பிலான ஆத்மா திட்டம் மாடித் தோட்டம் தொகுப்பும், 1 விவசாயிக்கு ரூ.50000 மதிப்பிலான கோழிகளும், 1 விவசாயிக்கு ரூ.148000 மதிப்பிலான பவர் டில்லரும், 9 விவசாயிகளுக்கு தலா ரூ.100000 வீதம் ரூ.900000 மதிப்பீட்டில் கறவை மாட்டு கடனுதவியும் ஆக மொத்தம் 21 விவசாயிகளுக்கு ரூ.1107475 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார்,உதவி ஆட்சியர்(பயிற்சி)ஆயுஷ் குப்தா,வேளாண்மை இணை இயக்குநர் முருகன்,மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (வேளாண்மை)வேதவல்லி, வேளாண்மை துணை இயக்குநர்(நுண்ணீர் பாசனம்) தயாளன், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

பருவ நெல் அறுவடைப்பருவத்தில் (KMS 2023-24) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 61 இடங்களிலும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் (NCCF)4 இடங்களிலும் ஆக மொத்தம் 65 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அரசு கட்டிடங்கள் திறக்கப்பட்டு இதுவரை 40679 மெட்ரிக் டன் நெல் 6219 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டு ராபிப் பருவத்தில் குறைந்தபட்சம் விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் திருவள்ளுர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் 486 விவசாயிகளிடமிருந்து 489 மெ.டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.33641498/- தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News