பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா
பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழாவை அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் துவக்கி வைத்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்;
திருவள்ளூர் அருகே பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா. அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் துவக்கி வைத்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குமார மக்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 58.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குட ஊர்வலத்துடன் பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கோவில் வந்தடைந்ததும் பக்தர்கள் கொண்டு வந்த பால் குடங்களில் உள்ள பாலை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தயிர், சந்தனம், இளநீர், தேன், ஜவ்வாது, குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட வாசன திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து அலங்காரமும் செய்து தூப, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அன்று கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதையடுத்து அன்றிரவு காப்புக்கட்டி விரதத்தை துவக்கினர். கடந்த 11 நாட்களாக இவ்விழா கோலாகலமாக நடைபெற்று வந்தது.
தினந்தோறும் அம்பாள் பல்வேறு அவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு. நாசர் துவக்கி வைத்தனர். அக்கினி குண்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கரகம் சுமந்தவரும், போத்துராஜாவும் முதலில் அக்கினி குண்டம் இறங்கினர். இவர்களை தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த குமார மக்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர் .
சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டியிருப்பதால் தீமிதி திருவிழா இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது. திருவிழாவை காண சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாமல் செங்குன்றம், சோழவரம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, மாதவரம், புழல், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவை கண்டு களித்தனர். இப்பகுதியில் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின்படி இரண்டாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னேற்பாடு நடவடிக்கையாக. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இங்கு வந்திருந்த ஆயிரக்கண பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது விழாவை காண ஏற்பாடுகளை விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.