தமிழில் உறுதிமொழி படிக்க முடியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழில் உறுதிமொழி படிக்க முடியாமல் திணறி உள்ளார்.

Update: 2024-03-26 09:41 GMT

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி  நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகலா செந்தில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக சார்பில் நல்லதம்பி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொன் பாலகணபதி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தமிழ் மதி, தற்போது வரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் மாவட்ட தேர்தல்  நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழியை கூட சரியாக தமிழில் படிக்க தெரியாமல் திணறினார். அப்போது  வேட்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் சொல்லிக் கொடுத்து உறுதிமொழி எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வேட்பாளர் உறுதிமொழி படிக்க கொடுத்த போது அதை படிக்க முடியாமல் திணறியதும் மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி எடுத்து படிக்கும் பொழுது கூடவே நாம் தமிழர் கட்சியினரும்  படித்தனர். மூச்சுக்கு மூச்சு தனது பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் பற்றியே பேசுவார். ஆனால் அவரது கட்சியின் வேட்பாளர் தமிழை வாசிக்க முடியாமல் திணறியது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News