காணாமல் போன இளம் பெண் நீர்வீழ்ச்சி அருகே சடலமாக மீட்பு: கணவர் கைது

கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மதன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-05 03:00 GMT

கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வி.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புழல் கதிர்வேடு பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம்-பால்கிஸ் ஆகியோரின் மகள் தமிழ்ச்செல்வி (18). இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் கிராமத்தை சேர்ந்த மதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து மதனும், தமிழ்ச்செல்வியும் பாடியநல்லூரில் தனியாக வீடியோ எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தமிழ்ச்செல்வியின் பெற்றோர் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால், தமிழ்ச்செல்வி போனை எடுக்காததால் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கும் இல்லாததால் சந்தேகம் அடைந்த இளம் பெண்ணின் தந்தை மாணிக்கம் தங்களது மகளை கண்டுபிடித்துத் தருமாறு செங்குன்றம் காவல் நிலையத்தில் தாய் பால்கிஸ் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செங்குன்றம் காவல் துறையினர் தமிழ்ச்செல்வியின் கணவர் மதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தமது மனைவியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயண வனம் கிராம பகுதியில் உள்ள மூக்கு மலை எனப்படும் கோணங்கி நீர்வீழ்ச்சி பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அப்போது அங்கு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மதன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செங்குன்றம் போலீசார் தனிப்படை அமைத்து ஆந்திராவிற்கு சென்றனர். ஆனால், அங்கு காணாமல் போன தமிழ்ச்செல்வி உயிரோடோ, அல்லது சடலமோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே பெண்ணின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது பெண்ணை கண்டுபிடித்துத் தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இதனை விசாரித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு காணாமல் போன பெண்ணை உடனடியாக கண்டுபிடித்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு செங்குன்றம் காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோணங்கி நீர் விழ்ச்சி அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் மதன் தமது காதல் மனைவி தமிழ்ச்செல்வியை நீர் வீழ்ச்சிக்கு அழைத்து சென்றதும், திரும்பி வரும்போது தனியாக வந்ததையும் போலீசார் உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கைலாச கோனா நீர்வீழ்ச்சி அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இதனையடுத்து காணாமல் போன தமிழ்ச்செல்வியின் பெற்றோரை அழைத்துச் சென்று சடலத்தை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் சடலத்தை கைப்பற்றி நாராயணவனம் காவல்துறையினர், பிரேத பரிசோதனை செய்து தடயவியல் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் கொலை நடந்தது ஆந்திர மாநில எல்லை என்பதால் தமது காதல் மனைவியை கொலை செய்த கணவன் மதனை செங்குன்றம் போலீசார் ஆந்திர நாராயண வனம் போலீசில் ஒப்படைக்கப்பட்டு அங்கு வழக்கு நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News