மகா சிவராத்திரி: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் ஆலய சிறப்பு பூஜையும், தல வரலாறும்

Surutapalli Temple History in Tamil-பள்ளி கொண்டீஸ்வரர் சுவாமிக்கு அதிகாலை முதல் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Update: 2023-02-18 09:45 GMT

சாயனகோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் பள்ளி கொண்டேஸ்வரர். 

Surutapalli Temple History in Tamil

இன்று மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக கோவில் முழுவதும் வண்ண மலர்களாலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

பள்ளி கொண்டீஸ்வரர் சுவாமிக்கு இன்று அதிகாலை முதல் பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, திருநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் மகா சிவராத்திரியோடு சனி பிரதோஷம் என்பதால் இக்கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பல நூற்றுக்கணக்கான லிட்டர் பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட 20-கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் மட்டும் அல்லாமல் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலே வந்து பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் உற்சவர்களுக்கு திருகல்யாணமும் நடைபெற்றது. கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில் தல வரலாறு:

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தார் இந்திரன். அசுரர்கள் இந்திரனின் ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகாஷ் பத்தி தெரிவித்துள்ளார். அதன்படி திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.

வாசுகி பாம்பை வைத்து பாற்கடலை கடையும்போது வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என சிவபெருமானை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர சொல்லி கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி கொண்டு வந்து சிவபெருமானிடம் தந்துள்ளார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும், உலகமும் அழிந்துவிடும். எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள் என சிவனிடம் மன்றாடினர்.

உடனே சிவன் மூர்த்தியாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த லோகமாதா பார்வதி தேவி, சிவனை தன் மடியில் கிடத்தி கொண்டு சிவபெருமானின் வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கழுத்தின் பகுதியில் கைவைத்து அழுத்தினார். இதனால் சிவனின் கழுத்தில் கண்டத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் நீலகண்டன் ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் அமுதாம்பிகை ஆனார்.

பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் சுருட்ட பள்ளி தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது. சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இந்தியாவில் எந்த இடத்திலும் பார்க்க முடியாது. லிங்கம் வடிவத்தில் மட்டுமே காட்சி அளிக்கும் சிவபெருமான் சுருட்டப்பள்ளியில் ஆலயத்தில் அம்மன் மடியில் படுத்த வாரு பார்க்கலாம்.

இந்த தலத்தில் சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், பள்ளி கொண்டீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். மேலும் ஒவ்வொரு மாதம் நடைபெறும் இந்த பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சௌபாக்ய செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருக்கின்றது.

இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவபெருமான் மனித உருவில், ஆலகால விஷம் உண்ட பின்னர், பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்தபடி ஓய்வெடுக்கும் உருவில் இருக்கிறார். இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News