ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யகோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Update: 2024-07-12 06:45 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் திருவள்ளூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம்தேதி உணவு டெலிவரி ஊழியர்கள் போல பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என 11 பேரை, போலீசார் அன்று நள்ளிரவு கைது செய்தனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பாக வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக,  பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், இவ்வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயல் முன்பாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News