மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவிடத்தில் அஞ்சலி
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.;
சென்னை அருகே உள்ள எஸ்.பி.பி. நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
பெரியபாளையம் அருகே தாமரைப்பக்கத்தில் உள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் நினைவிடத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மனைவி சாவித்திரி உள்ளிட்ட குடும்பத்தினர் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி.கொரோனவால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தனது இனிய குரலால் தமிழ் திரைப்படங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ரசிகர்களின் மனதில் இன்றளவிலும் நீங்காத இடத்தை பிடித்து உள்ளார். சென்னைஅருகே நினைவிடத்தில் அவருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது 71வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கத்தில் எஸ். பி. பி. யின் பண்ணை தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியன் அவரது மனைவி சாவித்திரி உள்ளிட்ட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரைப்பட முன்னணி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து குவிந்துள்ள ரசிகர்கள் எஸ். பி.பி.க்கு மலரஞ்சலி செலுத்தினர். மேலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் எஸ்.பி.பி.யின் நினைவிடத்தில் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எஸ்பிபியின் ரசிகர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.