குறைந்து வரும் பூண்டி ஏரி நீர் மட்டம், சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல்

திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியின் தற்போது நீர் மட்டம் குறைந்து தற்போது 146.மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

Update: 2024-06-12 03:15 GMT

நீர் இருப்பு குறைந்து காணப்படும் பூண்டி ஏரி 

சென்னையின் குடிநீர் முக்கிய ஆதாரமான பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது நிலவரப்படி 146 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமாகும். இதனுடைய மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில், தற்போது 146 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு 1270 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 146 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருப்பதால், பூண்டி வறட்சியை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை ஆகியவையே பூண்டி ஏரிக்கு நீர் ஆதாரமாக பார்க்கப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் சேமிக்கப்படும் பூண்டி ஏரியின் இணைப்பு கால்வாய் வழியாக தான் மற்ற நீராதாரங்களான புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், சென்னை குடிநீருக்காக இணைப்பு கால்வாய் வழியாக விநாடிக்கு 132 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. கடுமையான வெயில் காரணமாக வேகமாக வறட்சியை நோக்கி செல்லும் பூண்டியில் நீர் இருப்பும் குறைந்து வருகிறது இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்க, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வழங்கக்கூடிய கிருஷ்ணா நதி நீரை கடிதம் எழுதி, இந்த பருவத்திற்கான 8 டிஎம்சி தண்ணீரை பெற்று தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News