திருவள்ளூரில் படுக்கை வசதியின்றி தவிக்கும் கொரோனா நோயாளிகள்

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் போதிய படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகள் கீழே படுக்க வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-26 06:15 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் உள்ள 150 படுக்கைகளும் நிரம்பி உள்ளது. மருத்துவமனைக்கு தினந்தோறும் 150-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் வருவதால் போதிய படுக்கை வசதி இல்லை என்று கூறப்படுகின்றது.

மேலும் நேற்று ஒரே நாளில் 150 கொரோனா நோயாளிகள் அதிகரித்ததால் இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற இடத்தில் படுக்கை வசதி செய்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனை வளாகத்திலும் படிக்கட்டிலும் அமர்ந்தவாறு சிகிச்சை பெற்று வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக படுக்கை வசதி ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 4 பேர் என கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News