திருவள்ளூர்: ஏடிஎம் மையத்தில் ஆசிரியரை ஏமாற்றி பணம் அபேஸ்
திருவள்ளூரில். ஏடிஎம் மையத்தில் ஆசிரியரிடம் நூதன முறையில் ஏமாற்றி பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
பண மோசடி நடந்த ஏ.டி.எம்.
திருவள்ளூரை அடுத்த ஒதிக்காடு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் டேவிட் ( 64). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். டேவிட், திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். அவர், தனது கார்டை செலுத்திய போது பணம் வரவில்லை.
இதைக்கண்ட அவருக்குப் பின்னால் நின்றிருந்த டிப்டாப் ஆசாமி ஒருவர், அவரிடம் பேச்சுக் கொடுத்தார். பின்னர் அவர், டேவிட்டின் ஏடிஎம் கார்டை வாங்கி, அதனை இயந்திரத்திற்குள் போட்டு பார்த்தார். ஆனால் பணம் வரவில்லை எனக் கூறி மீண்டும் அவரிடம் வேறு கார்டை ஏமாற்றி கொடுத்தார். அந்த கார்டை பெற்றுக்கொண்ட அவர் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில், டேவிட் வங்கி கணக்கில் இருந்து ரூ. 60 ஆயிரம் எடுத்ததாக, அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டேவிட், வங்கியை நாடியபோது, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர், தன்னை நூதன முறையில் ஏமாற்றி பணம் எடுத்துச் சென்ற மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு, திருவள்ளூர் நகர போலீசில் புகார் கொடுத்தார். இது சம்பந்தமாகவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.