தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

அத்திவாக்கம் கிராமத்தில் தர்மராஜ திரௌபதி அம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழாவை முன்னிட்டு 350 பக்தர்கள் தீ மிதித்து அம்மன் வழிபாடு.

Update: 2024-07-08 04:30 GMT

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அடுத்த அத்திப்பாக்கம் ஊராட்சியில் தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தின் தீமிதி திருவிழா பத்து நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி காலை ஆலய வளாகத்தில் கொடிமரத்தில் கொடி ஏற்றுதல், 29ஆம் தேதி பகாசுரன் வதம் செய்தல், இதனைத் தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணம், சக்கரவர்த்தி கோட்டை திருவிழா, திரௌபதை துயில் உரிதல் திருவிழா, அர்ஜுனன் தபசு, தொடர்ந்து தர்மராஜா தேர் ஊர்வலம், மாடு விரட்டிப்பிடித்தல், படுகளம் பதி வட்டாரம் பெயர் தெருக்கூத்து, மஞ்சள் நீராட்டு விழா ஆகியவை நடைபெற்றது.

கடைசி10 ஆம் நாளான நேற்று அதிகாலை அம்மனுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் ஜவ்வாது தேன் பன்னீர் மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட வாசன திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலை ஊர் எல்லையில் விரதம் இருந்து காப்பு கட்டிய 350 பக்தர்கள் புனித நீராடி உடல் முழுவதும் மஞ்சள் சந்தனத்தாலும் பூக்களாலும் அலங்காரம் செய்து காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உற்சவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின்னர் வாகனத்தில் வைத்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஊர் எல்லையில் தீ மிதிக்க காத்திருந்த பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஆலப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், கன்னிகைப்பேர், திருக்கண்டலம், 82 பனப்பாக்கம், பெரியபாளையம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இத்திருவிழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அத்திவாக்கம் கிராம பொதுமக்களும் விழா குழுவினரும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News