ஆவின் பால் பண்ணையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

திருவள்ளூர் அருகே காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2024-05-25 10:30 GMT

ஆவின் பால் பண்ணையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

அனுமதிக்கப்பட்ட பாலை விட கூடுதல் பாலை கொண்டு சென்றது அம்பலமானது. 3 வாகனங்களில் 1620 லிட்டர் பாலை பிடித்து ஒப்படைத்தனர். ஊழல் தடுப்பு எஸ்பி., டிஎஸ்பி ஆகியோர் துறை ரீதியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பால் பொருட்கள் திருட்டுத் தனமாக கொண்டு செல்லப்பட்டு அதனை பறிமுதல் செய்ததால் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மொத்த விற்பனையாளர்கள் 21 பேர் உள்ளனர். இவர்களுக்கு 26 முதல் 30 வாகனங்களில் இந்த பால் காஞ்சிபுரம் செங்கல்பட்டு , மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.


இந்நிலையில் ஏற்றி அனுப்பப்படும் பால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அனுப்புவதாக சென்னை ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் காத்திருந்தனர். அப்போது காக்களூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்த மூன்று லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதாக தெரியவந்தது. இதனை எடுத்து அந்த லாரிகளை மீண்டும் ஆவின் பால் பண்ணைக்கு கொண்டு வந்து சோதனை செய்தனர். அதில் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட 135 டப்பில் 1620 லிட்டர் பால் கூடுதலாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஊழல் தடுப்பு டிஎஸ்பி சத்தியசீலன் விசாரணை மேற்கொண்ட போது பால் உற்பத்தி செய்து அதனை பேக்கிங் செய்து டப்பில் அடுக்கி வாகனங்களில் ஏற்றுவதற்காக வைக்கின்றனர். அதன் பிறகு அந்தப் பாலை வாகனத்தில் ஏற்றுவதும் , சரியாக ஏற்றுகிறார்களா என்பதை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நபர்களே ஆய்வு செய்கின்றனர். இறுதியில் பால் பண்ணை அதிகாரி அதனை சரி பார்த்து அனுப்பி வைப்பதும் தெரியவந்தது.


ஒவ்வொரு லாரியில் வரும் கூலி ஆட்களே அந்த பால் டப்புகளை லாரியில் ஏற்றுவதும், ஒரு லாரிக்கு எவ்வளவு டப் ஏற்ற வேண்டும் என்ற எந்த கணக்கும் அதனை செக் பண்ணும் நபர்களிடமோ வழங்குவதில்லை என்பது தெரியவந்தது. பால் பண்ணை அதிகாரிகளே கையில் வைத்துக் கொண்டிருப்பதால் செக் செய்து அனுப்புபவர்களுக்கும் எந்த விவரமும் தெரியவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இன்று காலை முதல் மீண்டும் ஊழல் தடுப்பு எஸ்பி, டிஎஸ்பி தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு எவ்வளவு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. எத்தனை மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்தும், அவர்களின் பணிகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை முடிந்த பிறகே துரை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மேலாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார். நாள் ஒன்றுக்கு ரூ 1 லட்சம் மதிப்பிலான பால் பொருட்களை திருட்டுத் தனமாக கொண்டு செல்லப்பட்டு அதனை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் துணையோடு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பொருட்கள் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News