புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.11லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-04-26 10:24 GMT

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சுமார் 9மணி நேரம் தீவிர சோதனை நடத்தி 1.11 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் புழல் பிடிஓ அலுவலகத்தில் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற சோதனையில் கேட்பாரற்று கிடந்த 1.11 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிஓ அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை விசாரணை நடத்தினர். நள்ளிரவு சுமார் 12மணி வரை என சுமார் 9மணி நேரம் நீடித்த சோதனையை முடித்து கொண்டு புறப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர். பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனையால் பரபரப்பு நிலவியது.

மேலும் இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  அரசு மக்களுக்கு வழங்கும் பல்வேறு பணிகளுக்கும் இலவச தொகுப்பு வீடு கட்டும் பணிகளுக்கும் லஞ்சம் கொடுத்தால் மட்டும்தான் பணிகள் நடைபெறுவதாகவும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் அரசு சார்ந்த அலுவலகங்களில் இது போன்று சோதனைகளை மேற்கொண்டு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டும்தான் இது போன்ற லஞ்சங்களை ஒழிக்க முடியும் என்று தெரிவித்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News