மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவள்ளூரில் அமைச்சர் நேரு தலைமையில் நடந்தது.

Update: 2022-07-10 04:30 GMT

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வளர்ச்சி  திட்ட்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவள்ளூரில் நடந்தது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு செய்யும் வகையில் திருவள்ளூர் நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிக்கும் மையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெயின் நகரில் ஒரு கோடியே 97 லட்சம் மதிப்பில் திருவள்ளூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ள அறிவுசார் நூலக கட்டுமானப் பணியையும் பார்வையிட்டார்.  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாநகராட்சி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பேசினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் முன்னிலை வகித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள், நகர் மன்றத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என்னவென்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம். அடிப்படை வசதிகள் குறித்து விடுத்த கோரி்ககைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நிதியைப் பெற்று உடனடியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

அதனையடுத்து செங்குன்றம் பேரூராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ஊராட்சி நிர்வாகத்தின் பதவிக் காலம் முடியும் வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என தெரிவித்தார். அதே போல் திருவள்ளூர் நகராட்சியை விரிவாக்கும் திட்டமும், காக்களூர் ஊராட்சியை பேரூராட்சியாகவோ நகராட்சியாகவோ மாற்றுவதற்கான பணிகளும் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகே மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் நம்ம டாய்லெட் என்ற திட்டம் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டு அதனை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுத்தது போல் நகராட்சிப் பகுதிகளிலும் நம்ம டாய்லெட் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராஜன், எஸ்.சந்திரன் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .சிவ்தாஸ்மீனா, பேரூராட்சிகளின் ஆணையர்.இரா.செல்வராஜ் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மற்றும்நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகர்மன்றத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், ஊராட்சி, நகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News