பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மீன் பிடிக்க சென்றபோது பூண்டி ஏரியில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஆனந்தன்.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகர் கிராமத்தை சேர்ந்தவர் மீனவர் ஆனந்தன் (வயது 48). இவர் இன்று அதிகாலை அவர் மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றுள்ளார்.
பின்னர் மீன் பிடித்துக்கொண்டு சுமார் 4மணி அளவில் வீட்டிற்கு திரும்பும் போது ஆனந்தன் திடிரென மயங்கி படகில் இருந்து தண்ணீருக்குள் விழுந்துள்ளார். இதனை பூண்டி ஏரிகரை மீது நின்று கொண்டிருந்த அப்பகுதியினர். புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட நேரமாகியும் தீயணைப்பு துறையினர் வராததால் அப்பகுதி இளைஞர்கள் ஆனந்தன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு ஏரிக்குள் சேற்றில் சிக்கி இருந்த ஆனந்தனின் உடலை கிராம இளைஞர்கள் மீட்டனர். மீன்பிடித்த போது மயங்கி ஏரிக்குள் ஆனந்தன் விழுந்தபோது அவர் சேற்றில் சிக்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.