அக்கரபாக்கம் சவுட்டு மண் குவாரியில் ஒருவர் சரமாரி வெட்டிப் படுகொலை

அக்கரபாக்கம் சவுட்டு மண் குவாரியில் ஒருவர் சரமாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-05-25 07:45 GMT

பிரகாஷ்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே, அக்கரம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது.
இந்த சவுட்டு மண் குவாரியில் இன்று காலை வழக்கம் போல் செயல்பட்டு வந்த நிலையில், ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பிரகாஷ் என்பவர் தனது லாரியில் சவுடு மண்ணை நிரப்பிக் கொண்டு குவாரியிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது பர்மிட் சீட்டை வாங்குவதற்காக கொட்டகை அமைக்கப்பட்டு பர்மிட் சீட்டு கொடுக்கும் இடத்திற்கு சென்றார். மற்றொரு லாரி ஓட்டுநர் சூர்யா என்பவரும் அவரது லாரிக்கு பர்மிட் சீட்டை வாங்குவதற்காக நின்றிருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் முன் விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பிரகாஷை பார்த்து கோபமடைந்த சூர்யா பிரகாஷ் தனது பணத்தை திரும்பு தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் சூர்யா தனது லாரியில் வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்து பிரகாசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பிரகாஷ் உயிரிழந்தார்.
இதுகுறித்து பெரியபாளையம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர். பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் பிரகாஷ் மற்றும் சூர்யாவும் நண்பர்கள் எனவும், சூர்யாவிடம் பிரகாஷ் குடும்ப சூழ்நிலை காரணமாக நகைகளை வாங்கி அடகு வைத்து திரும்பத் தராததால் இருவருக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தப்பி ஓடிய சூர்யா மீது வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு சவுடு மண் குவாரியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News