பெரியபாளையம் அருகே உறங்கி கொண்டிருந்த விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு

பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-08-30 11:15 GMT

பாம்பு கடித்து உயிரிழந்த விவசாயி முருகன்.

பெரியபாளையம் அருகே வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த விவசாயியை பாம்பு கடித்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 45).இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் மல்லி செடிகளை பயிரிட்டு வியாபாரம் செய்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு தனது வீட்டின் வெளிப்புறத்தில் கயிற்றுக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷ பாம்பு ஒன்று முருகனை கடித்துள்ளது.

இதில் வலியால் துடித்த முருகன் கூச்சலிட்டுள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விவசாயி முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த விவசாயி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News