ஊத்துக்கோட்டை அருகே பழைய இரும்பு கடையில் பணம் திருடிய 2 பேர் கைது

ஊத்துக்கோட்டை அருகே பழைய இரும்பு கடையில் பணம் திருடிய அறுவடை ஆப்பரேட்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-09-23 07:30 GMT

படம்

ஊத்துக்கோட்டை அருகே பழைய இரும்பு கடையில் பணம் திருடிய அறுவடை இயந்திர ஆப்பரேட்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டையை அடுத்த சூளைமேனி பகுதியைச் சேர்ந்த ரகுமான் என்பவர் அதே பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி அன்று வழக்கமாக கடையை திறந்து வியாபாரம் செய்த பின்னர் வழக்கமாக இவர் மது அருந்துவதாக தெரிகிறது. அன்று மாலை பணி சுமை காரணத்தினால் வழக்கத்தை விட அதிகமாக மது அருந்தியதால் தனது கடையின் ஷட்டரை பூட்டாமல் தூங்கியதாக கூறப்படுகிறது.

அன்றைய தினம் இரவு 1 மணி அளவில்  இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கடை பூட்டாமல் இருந்ததை நோட்டமிட்டு அவர்கள் ஷட்டரை தூக்கி கல்லாப்பெட்டியில் இருந்த 1லட்சத்து80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

அதிகாலை எழுந்து பார்த்தபோது கடையில் ஷட்டர் திறக்கப் பட்டு கல்லாப்பெட்டியில் இருந்த பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்த ரகுமான் கடையின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அவர் வழக்கமாக கடைக்கு வந்து செல்பவர்கள் என உறுதிப்படுத்தி அவர்களிடம் திருடு போன பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் அந்த நபர்களும் பணம் திருடவில்லை என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ரகுமான்  ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்கோட்டை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அவர்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த முக்காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திர ஆபரேட்டர்களான விஜி (வயது26),ஜெகதீசன் (வயது 24) என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் வீடுகளுக்கு சென்று இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது வழக்கமாக ரகுமான் நடத்தும் இரும்பு கடையில் பழைய பொருட்கள் போடும் பழக்கம் இருந்ததாகவும், அதில் பணம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாகவும், கடந்த மாதம் 16ஆம் தேதி நண்பர்கள் உட்பட நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து ஷட்டர் பூட்டி உள்ளதா என்பதை பார்த்தபோது ஷட்டர் திறந்து இருந்ததால் உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த 1 லட்சத்து80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகவும், அந்த பணத்தை செலவு செய்து விட்டதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பழக்கப்பட்ட பழைய இரும்பு கடையிலேயே கைவரிசை காட்டிய அறுவடை இயந்திர ஆபரேட்டர்கள் 2 பேரை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News