பொன்னேரியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி...

பொன்னேனியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-12-31 03:15 GMT

பொன்னேரியில் நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.

இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காரில் செல்வோர் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக, பொதுமக்களிடத்தில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பொன்னேரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பேரணியை பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஹெல்மெட் அணிந்தபடி அவரும் பேரணியில் பங்கேற்று இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். பொன்னேரி அரசு கல்லூரி வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி அம்பேத்கர் சிலை, பழைய பேருந்து நிலையம், ஹரிஹரின் பஜார் வீதி வழியே சென்று தேரடி சந்திப்பில் முடிவடைந்தது.

ஹெல்மெட் அணிவதன் அவசியம், ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட உயிரிழப்புகள், விபத்துக்களில் தலைக்கவசம் அணிந்ததால் உயிர் தப்பியவர்கள் குறித்து செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஒலிபெருக்கியில் அறிவித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பேரணியில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, காவல்துறையினர், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News