ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தியதாக வியாபாரி, கல்லூரி மாணவர் கைது

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தியதாக வியாபாரி, கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-08-27 12:25 GMT

பைல் படம்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ஜீப்பில் கஞ்சா கடத்தி வருவதாக முத்தாப்புதுபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் இன்று காலை கிடைத்தது

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையிலான போலீசார் வண்டலூர் மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலை பாலமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஜீப்பும் அதன் முன்பு பைக்கில் ஒரு வாலிபரும் சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.  இதனையடுத்து போலீசார் ஜீப்பை சோதனை செய்தனர்.

அப்போது அதில் 24 கிலோ எடை உள்ள கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. ஜீப்புடன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்,

மேலும் பைக்கில் வந்த வாலிபரையும் மினி லாரியும், டிரைவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் கஞ்சா கடத்தி வரும் ஜீப்பிற்கு உதவியாக போலீசாரை கண்காணிக்க வாலிபர் பைக்கில் வந்ததும் தெரியவந்தது.

மேலும் கஞ்சாவை ஜீப்பில் கடத்தி வந்தவர் திருத்தணி ஸ்டாலின் நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி சுரேஷ் என்பவரும் அவருக்கு உதவியாக இருந்த சென்னை அசோக் நகர் 7வது தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஷ் என்பதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் முத்தாப்புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் ஹரிஷ் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஆந்திர மாநிலம் கும்பலையும் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News