அம்பத்தூர் மண்டல ஊழியர் வீட்டில் 17 சவரன் தங்க நகை கொள்ளை!

சென்னை அம்பத்தூர் மண்டல ஊழியர் வீட்டின் கதவை திறந்து 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-05-27 15:05 GMT

கொள்ளை நடந்த அம்பத்தூர் மண்டல ஊழியர் வீடு.

ஆவடி, கன்னிகாபுரம், பெரியார் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (52). இவர், தனது வீட்டு 2வது மாடியில் ஏற்றுமதி ஆடை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மாலா (47). இவர் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பிரேம்குமார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சென்று பணிகளை கவனித்துள்ளார். அதன்பிறகு, அவரது மகள் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கி வீட்டிலிருந்து அலுவலக பணியாற்றியுள்ளார். இதன் பிறகு, மாலா வீட்டை பூட்டி விட்டு, சாவியை பால் பாக்கெட் போடும் பையில் மறைத்து வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர், அவர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பியுள்ளார்.

 மாலா பால் பையில் வைத்து இருந்த சாவியை எடுத்து கதவின் பூட்டை திறந்து வீட்டின் உள்ளே சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள இரும்பு பெட்டி திறந்து கிடந்தது. மேலும், அதிலிருந்த 17சவரன் தங்க நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் பால் பாக்கெட் போட்டு இருந்த பையிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்து தங்க நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என தெரிவந்தது.

இது குறித்து மாலா ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் வீட்டு கதவு, இரும்பு பெட்டியில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து உள்ளனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News