நெல்லையில் நடந்த சாலை விபத்தில் கணவன் கண் முன் மனைவி உயிரிழப்பு

நெல்லையில் நடந்த சாலை விபத்தில் கணவன் கண் முன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-11-18 11:36 GMT

நெல்லை  பாளையங்கோட்டை டி.வி.எஸ். நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது65).இவரது மனைவி சைலஜா (62).  இவர்கள் 2 பேரும் சேரன்மகாதேவி அருகே உள்ள இடையன்குளத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று  இருசக்கர வாகனத்தில்  நெல்லை நோக்கி வந்து கொண்டி ருந்தனர். வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் சென்ற அரசு விரைவு பேருந்து  புதிய பேருந்து  நிலையத்துக்குள் திரும்பியது. இதனால் சோமசுந்தரம் இருசக்கர வாகனத்தை  நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது பின்னால் அமர்ந்திருந்த சைலஜா தடுமாறி பின்பக்கமாக சாலையில் சாய்ந்தார். அப்போது அவர்களுக்கு வலது புறமாக சந்திப்பில் இருந்து புதிய பேருந்து  நிலையத்துக்கு வந்த சிவப்பு நிற பேருந்தின் பின்பக்க சக்கரம் சைலஜாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சோமசுந்தரத்திற்கு காயம் ஏற்பட்டது. மனைவி உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

நடுசாலையில்  சைலஜாவின் உடல் கிடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சைலஜா உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சோமசுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து பிரிவு காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சைலஜாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரது மகன் வினோத்குமார் சென்னையில் வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News