12 மணி நேர வேலை மசோதா வாபஸ் ஏன்? - நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கேள்வி!

பன்னிரண்டு மணி நேர வேலை மசோதா வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று என்று பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏவும் பா ஜ க சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-05 13:08 GMT

பன்னிரண்டு மணி நேர வேலை மசோதா வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று என்று பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏவும் பா ஜ க சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி டவுன் தெற்கு மவுண்ட் சாலையில் இந்து முன்னணி அலுவலகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம் எல் ஏ கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், நெல்லை மாவட்ட செயலாளர் சுடலை ஆகியோர் கலந்துகொண்டனர். அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன் தமிழக அரசைப் பற்றி குற்றம் சாட்டியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழ்நாட்டில் மட்டும் தான் திராவிடத்தைப் பற்றி பேசி வருகிறோம். திராவிடம் என்றால் என்ன? தமிழ், தெலுங்கு, துளு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளை உள்ளடக்கியதுதான் திராவிடம். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும். மக்களுக்காக நல்ல சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். மக்கள் மனதில் இடம்பெற வேண்டும். இதுதான் நல்லாட்சியின் அடையாளம். ஆனால் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி என்பது இதில் எந்த வகையில் உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. 2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முழுமையாக எந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று கூறினார்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பற்றி பேசிய அவர், குற்றங்கள் தொடர்பாக புகார் அளித்தால் பல காவல் நிலையங்களில் அதற்கான மனு ரசீது கூட கொடுப்பது இல்லை. எல்லோருக்கும் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார். குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டும் பாதுகாப்பு, ஒரு சிலருக்கு மட்டும் பாதுகாப்பு என்று இருந்தால் எப்படி இது சமமான ஆட்சியாக இருக்க முடியும்? என்று கூறிய அவர், 12 மணி நேர மசோதா வாபஸ் பெற்றதைப் பற்றியும் பேசினார்.

12 மணி நேர வேலை மசோதாவை தி.மு.க. தான் சட்டமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த சட்டம் எல்லா தொழிற்சாலைகளுக்கும் பொருந்தாது. சில தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்கும் வகையில் உள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று என்று கூறிய அவர், கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கு உள்ளது. சில விஷயங்களை கோடிட்டு காட்ட வேண்டியது கவர்னருக்கு அவசியமானது. அவர் கூறுவது சரியாக இருக்குமேயானால் அதனை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே எனவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News