நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை சிறப்பு குழுவினர் நேரில் ஆய்வு

அடைமிதிப்பான்குளம் குவாரி விபத்தைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் சிறப்பு குழுஆய்வு பணியை தொடங்கியது

Update: 2022-05-24 11:15 GMT

நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளும் ஆய்வு செய்ய 6 சிறப்புக்குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் குவாரி விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 55  குவாரிகளையும் ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று முதல் ஆய்வு பணியை தொடங்கி குவாரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் கடந்த 14-  ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்து இடிபாடுகளில் 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களை மீட்கும் பணி கடந்த 8 நாட்காளக நடைபெற்றது. அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் 22- ந்தேதி இரவுடன் மீட்பு பணிகள் நிறைவு பெற்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளும் ஆய்வு செய்ய 6 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவில் கனிமவளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையைச் சேர்தவர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்வார்கள் என ஆட்சியர் விஷ்ணு அறிவித்திருந்தார்.

இந்த குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை முதல் ஆய்வுப்பணியைத் தொடங்கினர். 6 குழுக்களும் தனித்தனியாக பிரிந்து ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை அருகே செங்குளம் தனியார் குவாரியில் சிறப்பு குழுவைச் சேர்ந்த கனிமவளத்துறை துணை இயக்குனர் சுமதி, உதவி இயக்குனர் பிரியா, புவியியலாளர் இளங்கோவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நவீன கருவி மூலம் குவாரியின் நீளம், அகலம், ஆழலம் ஆகியவை அளவீடு செய்யப்பட்டது. விதிமுறைகள் மீறல் உள்ளதா, உரிமங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது . மாவட்டம் முழுவதும் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் படி விதிமுறைகள் மீறிய குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது .

Tags:    

Similar News