கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து: 6 பேர் உயிருக்கு போராட்டம்

நெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்ததில் லாரி டிரைவர்கள் உட்பட ஆறு பேர் பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராட்டம்.

Update: 2022-05-15 02:30 GMT

கல்குவாரியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டதில் லாரி டிரைவர்கள் உட்பட ஆறு பேர் பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராட்டம். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சுணக்கம். எஸ்பி சரவணன் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடை மதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் நேற்றிரவு கல்களை ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென மிகப்பெரிய பாறை உருண்டு பள்ளத்துக்குள் கல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் 2 லாாிகள், 3 கிட்டாச்சி உள்ளே மாட்டிக் கொண்டன. லாரி டிரைவர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர்.

தகவல் அறிந்து நாங்குநேரி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். சுமார் 300 அடி பள்ளம் என்பதினாலும் மீட்பு பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் ராட்சத கிரைன் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அதன் பின் தான் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்படும் என தெரிகிறது. கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து ஆறு பேர் உயிருக்கு போராடி வரும் சம்பவம் நெல்லையில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News