என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைக்கு, எஸ். டி. பி. ஐ கண்டனம்

எஸ் டி பி ஐ தலைவர்களை அச்சுறுத்தவே, என் ஐ எ சோதனை நடத்தப்படுகிறது என, நெல்லையில், எஸ் டி பி ஐ மாநில தலைவர் முபாரக் தெரிவித்தார்.

Update: 2022-09-22 10:50 GMT

நெல்லையில், எஸ் டி பி ஐ மாநில தலைவர் முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார்.

எஸ்டிபிஐ தலைவர்களை அச்சுறுத்தவே, என்ஐஏவை ஏவி விட்டு மத்திய அரசு சோதனை நடத்துகிறது. எங்கள் கட்சி தலைவர்களின் வீடுகளில் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் என்ஐஏ தமிழகத்தில் நுழைய முடியாத அளவுக்கு சட்டம் இயற்ற வேண்டும் என நெல்லையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று, 'பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா' மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து  எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மேலப்பாளையத்தில் இன்று, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்ஐஏ சட்டவிரோதமான சோதனை மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் பரக் அப்துல்லா வீட்டில் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தி டெல்லியில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் கீழ் என்ஐஏ அவரை கைது செய்துள்ளது.

மதுரையில் எஸ்டிபிஐ மாநில செயலாளர் நஜிமா பேகம் வீட்டில் அத்துமீறி நுழைந்து,  பை நிறைய பணம் எடுத்து சென்றுள்ளனர்.  நாடு முழுவதும எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தலைவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். மாநில சுயாட்சி பேசும் தமிழக முதல்வர் ஆட்சியின் சிறப்பை கெடுக்கவே, இதுபோன்று கைது செய்கிறார்கள். எனவே ஜனநாயகபடி அனைத்து ஜனநாயக சக்திகளும் இதை கண்டிக்க முன்வர வேண்டும்.

எங்களை அச்சுறுத்தவே இது போன்ற சோதனை நடத்துகிறார்கள். எதிர்காலத்தில் தமிழகத்தில் என்ஐஏ நுழைய முடியாது என்ற வகையில்,  தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News