பணிச் சுமை அதிகம்.. திருநெல்வேலியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் போராட்டம்…

திருநெல்வேலியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-11-07 16:53 GMT

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பணியாளர்கள்.

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் பணிபுரியம் ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணியில் அடிப்படையில் ரூ. 4500 வரை மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பணிச்சுமை அதிகமாக இருப்பதாகக் கூறி திருநெல்வேலியில், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சிஐடியு தொழிற்சங்க திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:

2018 ஆம் ஆண்டில் தொற்றாநோய் மருத்துவப் பிரிவில் பணிசெய்ய நியமனம் செய்யபட்டு அதன்பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களைதேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணிபுரிய மாற்றம் செய்யப்பட்டோம். ஆனால் மக்களை தேடி மருத்துவம் என மாறியபோது எங்களுக்கு பணிச்சுமை கூடுதலாக தரப்பட்டது. ஆனால் அதற்கான ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

மேலும், எங்களுக்கு மருத்துவம் தொடர்பான குறிப்பு விபரப் பட்டியலுக்கான எந்தவித நோட்டு புத்தகமோ பேனா மற்றும் ரத்த அழுத்த மிஷினுக்கான பேட்டரி எதுவும் அரசு மூலம் வழங்கப்படவில்லை. இதில் கூடுதல்வேலையாக தரப்பட்ட TNPHR என்ற இணையளத்தில் எங்களது சொந்த செலவில் செல்போன் வாங்கி அதன்மூலம் ஏரியா மக்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதற்கான எந்த செலவும் எங்களுக்கு கொடுக்கவில்லை.

தினமும் 20 வீடுகள் Screening செய்ய வேண்டும் என்ற பணிக்கு ரூ. 3500-மும், பிரஷர் மற்றும் சுகர் நோயாளிகளுக்கு மாத்திரை வழங்க வேண்டும் என்ற பணிக்கு ரூ. 1000 மட்டும் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் பணிகள் அதிகமாக உள்ளது.

திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பணியாற்றினால் அதற்கு எங்களுக்கு எந்த தொகையும் வழங்குவது இல்லை. எனவே, எங்களை தன்னார்வலர்கள் கூறிவிட்டு தற்போது ஊழியர்கள் நிலையில் என எங்களை கொத்தடிமைகளாக வேலைவாங்குவதால் தாங்கள் உடனே நடவடிக்கை எடுத்து எங்களுக்கான ஊக்கத் தொகை ரூ. 4500-க்கான பணிகள் என்ன என்ற விபர சுற்று அறிக்கை நகல் எங்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

மேலும், சில குறிப்பிட்ட வட மாவட்டங்களில் 2022 ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 7 மாதம் கூடுதல் ஊக்கத் தொகை அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளதாக தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் தற்போது எங்களுக்கான பிரஷர் மீட்டர் இரண்டும் பழுதுபட்ட காரணத்தால் 1-11-2022 முதல் வீடுகளில் Screening செய்வதை மட்டும் நிறுத்தியுள்ளோம். ஆனால் நோயாளிகளுக்கு இரண்டு மாதத்திற்குரிய மாத்திரைகள் மட்டும் தடையின்றி வழங்கி தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, எங்களுக்கும் கூடுதல் ஊக்கத்தொகை கிடைக்க ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும், ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயாளிகளை Screening செய்ய புதிய பிரஷர் மற்றும் க்ளுக்கோ மீட்டர் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News