அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் நெல்லையில் இடி மின்னலுடன் பலத்த மழை

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கிய நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

Update: 2022-05-04 12:04 GMT

நெல்லையில் இன்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் வழக்கமாக மே மாதம் ஏற்படக்கூடிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. தொடர்ந்து இன்று முதல் வரும் 28ஆம் தேதி கத்திரி வெயில் தாக்கம் இருக்கும். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்ட நிலையில், இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் பிற்பகல் வரை கோடை வெயில் சுட்டெரித்தது. பிற்பகல் 3.30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது.

குறிப்பாக நெல்லை மாநகர பகுதிகளான நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் 20 நிமிடம் கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மழையுடன் சேர்ந்து காற்றும் பலமாக வீசியது. கனமழை காரணமாக நெல்லை மாநகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லையில் சில நாட்களாக சராசரியாக 100 டிகிரி வரை வெயில் தாக்கும் காணப்படுகிறது. நேற்று அதிகபட்சம் 102 டிகிரி வெயில் பதிவாகியதால் அனல் தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதி அடைந்து வரும் நிலையில் இன்று பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் வரும் ஆறாம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News