எஸ்டிபிஐ கட்சி ஆலோசனை கூட்டம்: தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு

வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தந்த தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Update: 2021-08-16 12:16 GMT

விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையைத் தந்த தமிழக முதல்வர்க்கு எஸ்டிபிஐ கட்சியின் விவசாய அணி சார்பில் நன்றி தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நடந்த எஸ்டிபிஐ கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையைத் தந்த தமிழக முதல்வர்க்கு எஸ்டிபிஐ கட்சியின் விவசாய அணி சார்பில் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாய அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லா தெரிவித்ததாவது:- இருபோகம் சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சம் ஹெக்டேரில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் அதிகப்படியாக உற்பத்தியாகும் விளைபொருட்களுக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் மற்றும் 3 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களை மேம்படுத்த அரசு திட்டங்களை வகுத்துள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்து தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் முழுமையாகப் அகற்றுவதற்கு உரிய எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏரி மற்றும் குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அரசு விவசாயிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இதை வரவேற்கும் அதே சமயத்தில் விவசாயிகளின் போர்வையில் மணல் கொள்ளையர்கள் வண்டல் மண்ணை அளவுக்கதிகமாக நீர்நிலைகளில் இருந்து எடுத்து விவசாயிகளிடம் அதிக விலையில் விற்பது தடுக்கப்பட வேண்டும்.

அனைத்து உழவர் சந்தைகளிலும் குளிரூட்டப்பட்ட அறைகள் அமைக்கப்பட வேண்டும். இதனால் விவசாயிகள் விற்பனை செய்ய இயலாத காய்கறி, பழங்களை பாதுகாத்து மறு நாள் விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும். விவசாய விளைபொருட்களின் விலை நிர்ணயித்தல் இயந்திரங்களின் பயன்பாடு தவிர்க்க இயலாததாக இருக்கிறது. எரிபொருள் விலையேற்றம் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிகமாக பாதிக்கின்றது. ஆகையால் மீனவர்களுக்கு அரசு எரிபொருள் மானியம் வழங்குவது போல் விவசாயிகளுக்கும் எரிபொருள் (டீசல்) மானியம் வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் மனித சக்தியை தனியார் விவசாய நிலங்களில் பணி செய்ய அரசு ஆவணம் செய்ய வேண்டும். இதன் மூலமாக விவசாய வேலை ஆள் பற்றாக்குறை குறைவதோடு கிராமப்புற மக்களுக்கு அதிக நாட்கள் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் எதிர்காலங்களில் இது போன்ற மக்கள் விரோத சட்டங்கள் தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்களை பாதிக்காத வகையில் அரசு விவசாய கொள்கையை வெளியிட வேண்டும் என  தெரிவித்தார்.

Tags:    

Similar News