கல்குவாரி விபத்து: தந்தை-மகன் கைது செய்து சிறையில் அடைப்பு

அடைமதிப்பான் குளம் கல்குவாரி பாறை சரிவு விபத்தில் தேடப்பட்ட குற்றவாளியான உரிமையாளர்கள் தந்தை மகன் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-05-21 17:45 GMT

நெல்லை கல்குவாரி விபத்தில் கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர்களான தந்தை. மகன் இருவரும் மங்களூரில் இருந்து நெல்லை முன்னீர் பள்ளம் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர். காவல் நிலைய விசாரணைக்கு பிறகு இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி வரும் 3- ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவுவிட்டார் இதனை அடுத்து இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த செல்வராஜ் அவரது மகன் குமார் ஆகியோருக்கு சொந்தமாக பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான் குளத்தில் இயங்கி வரும் கல் குவாரியில் கடந்த 14-ம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள லாரி டிரைவர் ராஜேந்திரனை மீட்கும் பணிகள் நடத்து வருகிறது. இந்த கல்குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து முன்னீர் பள்ளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குவாரி ஒப்பந்தரரான சங்கர நாராயணன் மற்றும் மேலாளர் இருவரை கைது செய்தனர். இருப்பினும் குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ் அவரது மகன் இருவரும் தலைமறைவானதால் அவர்கள் கைது செய்யப்படாமல் இருந்தனர். இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று 20- ந்தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த போது செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் போலீசார் தமிழகம் அழைத்து வந்தனர். இருவரும் பலத்த பாதுகாப்புடன் நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார் செல்வராஜ் மற்றும் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு இருவரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 5 (பொ) நீதிபதி திரிவேணி முன்பு ஆஜர்படுத்தினர், நீதிபதி மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார். மருத்துவ பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு வந்த நிலையில் இருவருக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கு பின் இருவருக்கும் ரத்த அழுத்தம் குறைந்த பின் நீதிபதி திரிவேணி முன்னிலையில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் 14 நாட்கள் (வரும் 03.06.22 தேதி) வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News