கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்

கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-05-19 07:38 GMT

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு.

நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் கடந்த 14- ந்தேதி இரவு கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 நபர்களில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 - வது நபர் இடிபாடுகளில் சிக்கியுள்ள லாரி ஒட்டுனர் ராஜேந்திரன் உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது. இன்று 5- வது நாளாக தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத்துறையினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புபணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மீட்பு பணிகளையும் துரிதப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் - விபத்து நடந்த குவாரியில் மீட்பு பணிகள் 5- வது நாளாக நடக்கிறது. ஏற்கனவே 5- வது நபரை மீட்க சிறிய அளவில் வெடிவைத்து பாறைகள் தகர்கப்பட்ட பின்பே மீட்கப்பட்டது.

இந்த முறையிலேயே 6 வது நபரையும் மீட்கும் முயற்சி நடக்கிறது. இந்த விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே குவாரி குத்தகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் கூறுகையில், குவாரி விபத்து தொடர்பாக விசாரணை நேர்மையாக நடைபெறும் வகையில், ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே குவாரி உரிமையாளர் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் வசிக்கும் வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News