நெல்லையில் 123 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

பள்ளிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை.

Update: 2021-08-31 16:00 GMT

தச்சநல்லூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 123 கிலோ குட்கா புகையிலை பொருட்கள்.

நெல்லை மாநகர் பகுதியில் கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாநகர காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் தலைமையிலான போலீஸார் தச்சநல்லூர் குருநாதன் விலக்கு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது மானூரைச் சேர்ந்த ஆறுமுகம் வயது 40 என்பவர் தவேரா காரில் அரசு தடை செய்யப்பட்ட சுமார் 93 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து அவரிடமிருந்த 93 கிலோ குட்கா மற்றும் தவேரா காரை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தச்சநல்லூர் மதுரை ரோடு வடக்கு புறவழிச்சாலையில் நடைபெற்ற வாகன தணிக்கையின் போது, அதே மானூரைச் சேர்ந்த ஷேக் வயது 47 மைதீன் என்பவர் இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 30 கிலோ புகையிலை பொருட்களை எடுத்துச் சென்றார். இதையடுத்து ஷேக்மைதீனையும் கைது செய்து அவரிடம் இருந்த 30 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் தச்சநல்லூர் பகுதியில் மொத்தம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 123 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லை மாநகரில் குட்கா போன்ற போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தச்சநல்லூரில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து எனது தனிப்படையினர் அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகின்றனர்.  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதன் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

நெல்லை பேட்டையில் சில தினங்களுக்கு முன்பு தான் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அடுத்தடுத்து குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்திருப்பதால் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் கலக்கத்தில் உள்ளது.

Tags:    

Similar News