தென்காசியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 200-க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய மூன்று தாலுகாக்களில் இருந்து 200 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசு வழங்கும் உதவித்தொகை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே வீட்டு மனை பட்டா இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க கோரியும், கணவனை இழந்த விதவைகளுக்கு விதவை உதவித்தொகை போன்றவற்றை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.