தோரணமலை முருகன் கோவிலில் பக்தர்கள் பெளவுர்ணமி கிரிவலம் வந்தனர்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வாழ்ந்து மூலிகைகள் குறித்து ஆராய்ச்சி செய்த சிறப்புகளை கொண்டது இத்திருத்தலம்.
இக் கோவிலில் மாதந் தோறும் வரும் பெளவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். சுமார் 7 கி.மீ தூரம் சுற்றளவு கொண்ட 3 மலையை பக்தர்கள் சுற்றி வலம் வந்து வேலவனை வணங்குவார்கள்.
கொரோனா காலத்தால் நிறுத்தப்பட்டிருந்த கிரிவலம் 9 மாத இடைவெளிக்கு பின்னர் இன்று நடந்தது. இன்று காலை துவங்கிய கிரிவல நிகழ்ச்சியை கோவில் நிர்வாகி செண்பகராமன் துவக்கி வைத்தார். இந்த மூலிகை வனம் நிறைந்த மலைப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலை முன் வைத்து கிரிவலம் சென்றனர்.
கிரிவலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.