சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த பெண் தேர்ச்சி

சிவில் சர்வீஸ் தேர்வில் 851-வது ரேங்க் எடுத்து தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண் தேர்ச்சி பெற்றுள்ளார்.

Update: 2024-04-18 08:53 GMT

 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாணவி இன்பா

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 24 அரசு உயர் பதவிகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை கடந்த ஆண்டு வெளியிட்டது.

அதன்படி, 1,146 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இருந்து இந்த தேர்வினை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர்.

இந்த நிலையில், மூன்று கட்டமாக நடைபெற்ற தேர்வின் அடிப்படையில், முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு கடந்த மாதம் நேர்முகத் தேர்வு டெல்லியில் நடைபெற்றது.

இந்த நிலையில், மூன்று விதமான தேர்வுகளிலும் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இதில் 1,016 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த தேர்வில் 851-வது ரேங்க் எடுத்து தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண் தேர்ச்சி பெற்றுள்ளார்.

செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி இன்பா என்கின்ற பெண் 2 முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தோல்வியுற்ற நிலையில், 3-வது முறையாக தற்போது 851 வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும், தற்போது கோயமுத்தூர் பகுதியில் உள்ள பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவர் பணியில் சேர்ந்து ஒரு மாத காலம் ஆகியுள்ள நிலையில் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவரது தாய் ஸ்டெல்லா தெரிவிக்கும் போது, தங்களது குடும்ப வறுமையை பொருட்படுத்தாமல் தனது மகள் கடினமாக முயற்சி செய்து அவள் சிறு வயது கணவான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது தங்களுக்கும், தங்கள் ஊர் மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அவளைப் போன்று பல்வேறு மாணவ, மாணவிகள் நல்ல நிலைமை அடைய தேவையான உதவிகளை கண்டிப்பாக அவள் செய்வாள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News