கொரோனா அச்சம்: களையிழந்த கோவில் திருவிழா

Update: 2021-03-25 14:04 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள பிரசித்திபெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் விழா கொரோன தொற்று அச்சம் காரணமாக பொலிவிழந்து காணப்படுகின்றது.

உலகையே திருப்பி போட்ட கொரோன நோய் தொற்று ஓராண்டாகியும் இன்னும் குறைந்த பாடில்லை. ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஆண்டு நடக்கவில்லை. ஓராண்டிற்க்குப் பிறகு நோய் தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் தொற்று அதிகரித்திருக்கின்ற காரணத்தால் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா பொலிவிழந்து காணப்படுகின்றது.


பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் வருகின்ற 30ம் தேதி பொங்கல் விழாவும். 31ம் தேதி தேர்பவனியும் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி விழா நிறைவு பெறும்.

விழாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு மக்கள் வருகை குறைவாக இருப்பதாக கோவில் அறக்காவலர் வெங்கடேஷன் கூறினார். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும் சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதாகவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.

வியாபாரிகள் கூறும் போது கடந்த ஆண்டும் விழா நடக்காத நிலையில் இந்த ஆண்டாவது மக்கள் அதிகமாக வருவார்கள் என்று பல ஆயிரம் செலவு செய்து கடைகளை ஏலத்திற்க்கு எடுத்துள்ளோம். லாபம் கிடைக்கவில்லை என்றாலும் கடந்த ஆண்டைப்போல் நஷ்டம் ஏற்ப்படாமல் இருந்தால் போதும் என்கின்றனர்.

எந்த குறையும் இல்லாமல் இந்த ஆண்டு தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனி திருவிழா நடக்க வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாக இருக்கின்றது.

Tags:    

Similar News