பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட தலைமைக் காவலர் இடமாற்றம்

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக தலைமைக் காவலரை எஸ்.பி., இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-08-29 07:02 GMT

பைல் படம்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே இடையர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா.  இவர், அறந்தாங்கி, திருச்சி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெறும் திருவிழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு நடனமாட இளம்பெண்களை அழைத்து செல்லும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடன பெண் ஒருவர், தன்னை ராஜா பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக முதலமைச்சரின் தனிபிரிவிற்கு புகார் அனுப்பியிருந்தார். மேலும், அதற்கு உடந்தையாக சாக்கோட்டை காவல் நிலைய தலைமை காவலர் மாயவதனும் இருந்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சாக்கோட்டை காவல் நிலையத்தினர்,  ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இச்சம்பவத்தில் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டு பெண்களை விசாரணைக்கு அழைத்ததாக சாக்கோட்டை தலைமை காவலர் மாயவதன் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை மானாமதுரை காவல் நிலையத்திற்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News