சட்டக்கல்லூரியை சிவகங்கைக்கு மாற்றக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம்

சிவகங்கையில் அமைய வேண்டிய சட்டக் கல்லூரியை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு காரைக்குடிக்கு கொண்டு சென்று விட்டது

Update: 2021-09-28 07:02 GMT

சிவகங்கையில் அரசு சட்டக்கல்லூரியை அமைக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்ட இளைஞர் கலைச் செல்வம்.

சட்டக்கல்லூரியை சிவகங்கைக்கு மாற்ற வேண்டும். தனிநபர் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கையில் அரசு சட்டக் கல்லூரிஅமைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த செந்தில்நாதன்  வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சிவகங்கை தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டசபையில்  இந்தமாதம் 3-ஆம் தேதி, சிவகங்கையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் எம்எல்ஏ செந்தில்நாதன்  கோரிக்கை வைத்தார்.

ஆனால் ,சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி , சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்  ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.  நியாயமாக  சிவகங்கைக்கு வர வேண்டிய அரசு சட்டக் கல்லூரியை, அரசியல் காழ்ப்புணர்ச்சி  காரணமாக காரைக்குடிக்கு திமுக அரசு கொண்டுசென்று அநீதி இழைத்துவிட்டது. எனவே,  சட்டக்கல்லூரியை மாவட்டத்தின் தலைநகரமான சிவகங்கைக்கு கொண்டு வரவேண்டும்.

 சிவகங்கையில் தான் மாவட்ட நீதிமன்றம் உள்ளது.  சட்ட கல்லூரியும் இங்கேதான் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி,  சிவகங்கை மாவட்டம், மிளகனூர்  ஊராட்சி நாராயணதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச் செல்வம் என்பவர் தனி ஆளாக  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கையில் பதாகை ஏந்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த சிவகங்கை காவல் துறை காவலர்கள் அவரை சிவகங்கை தாசில்தாரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை விளக்கிக்கூறினர்.


Tags:    

Similar News