அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்தியது கிடையாது

இந்த சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காக அன்றைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்

Update: 2022-01-14 08:30 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் சமூக நலத்துறையின் மூலம் பெண்களுக்கு நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கிய அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.

அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக நல்ல திட்டங்களை ஒருபோதும் திமுக அரசு நிறுத்தியது கிடையாது  என்றார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்.கேஆர். பெரியகருப்பன்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் சமூக நலன் மற்றும் இத்துறையின் மூலம் பெண்களுக்கு நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: 

கடந்த ஆட்சியாளர்கள் கடன் சுமையை இந்த அரசின் மீது திணித்து விட்டு சென்றுள்ளனர். இருந்தாலும் ஏழை எளியவர்களுக்கு செய்யப்படும் உதவியை நிறுத்திவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.  இந்த சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி  கொண்டு வந்தார். ரூ. 5000 -இல் தொடங்கிய இந்த திட்டம், இன்று படிபடியாக 50000 வரை உயர்ந்து தாலிக்குதங்கம் வரை வளர்ந்துள்ளது என்றால், இந்தத் திட்டத்தின் பிதாமகன் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான்.

கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால்  திமுக கொண்டு வந்த பல திட்டங்களை  செயல்படுத்தாமல்  கைவிட்டார்கள். திமுக ஆட்சியில் கலைஞராக இருந்தாலும் இன்றைய முதல்வராக இருந்தாலும் வேறு ஆட்சியாளர்கள் கொண்டுவந்த எந்த திட்டத்தையும், இதுவரை தடை செய்யாமல்  செயல்படுத்தி வருகின்றார்கள்.  அதே வழியில் நின்று இன்றைய முதல்வர் மனித நேயத்துக்கு சொந்தக்காரான இவர் அன்றைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த திட்டம் நல்ல திட்டம் என்றாலும்,  அதனை பாகுபாடின்றி வேறுபடுத்தாமல் செயல்படுத்தியவர் நமது முதல்வர்.

கடந்த ஆட்சி காலத்தில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு சில திட்டங்களை கொண்டு வந்து பெயரளவில் செயல்படுத்தி வந்தனர்.அதனை முறையாக செய்யாமல் ஏனோதானோ என்று செய்து வந்தனர். நல்லதிட்டம் என்றால்,  அதனை முறைப்படுத்தி செயல்படுத்தி வருபவர் இன்றைய முதல்வர் ஸ்டாலின் என்றார் அமைச்சர் பெரியகருப்பன். இதைத்தொடர்ந்து திருப்பத்தூரில் இதே போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம், மாவட்டத்தில் மொத்தம் தகுதியுடைய 9000 பயனாளிகளில்,முதற்கட்டமாக 2100 பேருக்கு 7 கோடியே 93 லட்சத்து 28 ஆயிரத்து 941மதிப்பில் தாலிக்குத்தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா,வேங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன் , மணிமுத்து, திருப்பத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News