உண்ணாவிரதம் என்று ஆர்.பி.உதயகுமார் பேச்சு: அமைச்சர் பெரியகருப்பன் கருத்து
ஸ்டாலின் நேர்மையாக தேர்தலை நடத்தி விடுவார் என்ற நம்பிக்கையில் தான் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியுள்ளார்
சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பது, முதலமைச்சர் ஸ்டாலின் மீதுள்ள நம்பிக்கையில்தான் என்றார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் .
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: ஜனநாயக முறைப்படி தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேர்மையாக தேர்தலை நடத்தி விடுவார் என்ற நம்பிக்கையில் தான் அப்படி பேசியுள்ளார். மேலும், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவை வெற்றியடைய செய்தது போல், தற்போது நடக்கின்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள் என்றும், புதிய வாக்காளர்கள் அறிவிப்பு வரும்போது அதில் கவனம் செலுத்தாமல், அலட்சியமாக இருந்துவிட்டு, காலம் கடந்து பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறை சொல்வது, ஆளுங்கட்சியின் மீது வீண் பழி சுமத்துவதற்காகத்தான் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.