முறைகேடாக பத்திரம் பதிந்து பட்டா மாற்றிய அதிகாரி மீது நடவடிக்கை கோரி போராட்டம்

மோசடியாக பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டம்

Update: 2022-02-18 09:18 GMT

சிலகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மோசடியாக பத்திர பதிவு செய்து பட்டா மாறுதல் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிகாரியின் காலில் விழுந்து ஆதிதிராவிட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பகுதியில் இடம் இல்லாமல் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு உதவி செய்ய நினைத்த நடிகர்திலகம் சிவாஜிகணேசன், கடந்த 1965 -ம் ஆண்டு காரைக்குடியில் தேன்கூடு என்ற நாடகம் நடத்தி அதன் மூலம் கிடைத்த வருமானத்தின் மூலம்,  ஏ.வி.எம் மெய்யப்பசெட்டியாரிடம் இருந்த சுமார் இரண்டரை ஏக்கர் இடத்தை வாங்கி அதை தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

2012 ல் சிவாஜி கணேசன் நலச் சங்கத்திற்கு பாத்தியப்பட்டது என மாவட்ட வருவாய் அலுவலர் விசாரனை நடத்தி 2013 ல் பட்டா வழங்கப்பட்டதாம். இதையடுத்து தங்கள் நலசங்கத்திற்கு வழங்கப்பட்ட இடத்தை அதிகாரிகளின் துணையுடன் சிலர் மோசடியாக பத்திர பதிவு செய்து பட்டா மாறுதல் செய்துள்ளதாக பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட  வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் சிவாஜி கணேசன் தானமாக வழங்கிய இடத்தை மீட்டு தர வலியுறுத்தியும் நடைபெற உள்ள 31வது வார்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து கருப்புக்கொடி கட்டி பள்ளிக்குழந்தைகளுடன் ஆதிதிராவிட மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தை நடத்த வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வந்தனர். ஆட்சியர் இல்லாததால் சிவகங்கை டிஆர்ஓ மணிவண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோசடியாக பத்திர பதிவு செய்து பட்டா மாறுதல் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News