அஞ்சல் வாக்களிக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Update: 2021-04-21 12:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில், அஞ்சல் வாக்கு செலுத்தாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உடனடியாக வாக்குச் செலுத்த ஜாக்டோ ஜியோ வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த ஏப். 6 ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தொகுதியில் 2560, சிவகங்கையில் 2954, மானாமதுரையில் 3160, திருப்பத்தூரில் 1594 என மொத்தம் 10,268 தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 75% பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ள நிலையில், 25% பேர் இதுவரை தங்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்தாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதில் காரைக்குடி தொகுதியில் 10%, திருப்பத்தூரில் 22%, சிவகங்கையில் 25%, மானாமதுரையில் 41% பேரும் தங்கள் வாக்குகளை இதுவரை திருப்பி அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக தெரிய வருகிறது.தபால் வாக்குகளை செலுத்த வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ம் தேதி காலை 8 மணி வரை அவகாசம் இருந்தாலும் அஞ்சலக தாமதத்தை தவிர்க்க ஏப்ரல் 25 ம் தேதிக்குள், செலுத்தாத வாக்குகளை அஞ்சல் பெட்டியில் செலுத்த ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.

கடந்த சில தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தபால் வாக்குகள் மாறியுள்ளதை கருத்தில் கொண்டு அஞ்சல் வாக்குகள் செலுத்தாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் விருப்பமான வேட்பாளருக்கு வாக்களித்து உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று உடனடியாக வாக்குச்சீட்டு அடங்கிய உறை மற்றும் உறுதிமொழி படிவத்தை உரிய உறையினுள் வைத்து அஞ்சலகம் மூலம் செலவில்லாமல் அனுப்பி, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News