பேருந்து நிலையத்திற்கு தினசரி சந்தை மாற்றம் செய்யும் பணி தீவிரம்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் செயல்பட்டுவந்த தினசரி சந்தை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாம் அலை வெகுவேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்திருந்ததுடன் காய்கறி,பலசரக்கு மற்றும் பால் கடைகள் மட்டும் செயல்பட 12 மணிவரை அனுமதித்துள்ளது.
இந்நிலையில் சிவகங்கை தினசரி சந்தையானது இட நெருக்கடியான பகுதியில் செயல்பட்டு வந்ததால் கொரோனா பரவு அபாயம் ஏற்பட்டது. மேலும் தினசரி சந்தையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய பொதுமக்களும் கோரிக்கைவிடுத்தனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகமானது தற்சமயம் சிவகங்கை பேருந்து நிலையத்தை தேர்வு செய்ததுடன் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது.
அதில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இடைவெளி விட்டு கடைகள் அமைக்க இடம் ஒதுக்கியதுடன் கூட்டம் அதிகம் கூடா வண்ணம் கயிறுகள் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.