'நாட்டாமை' பாணியில், பஞ்., தலைவருக்கே இந்த நிலையா? 15 குடும்பங்கள் ஒதுக்கிவைப்பு

இளையான்குடி அருகே 'நாட்டாமை' பாணியில், பஞ்சாயத்து தலைவர், 15 குடும்பங்களை ஊரை விட்டு கிராமத்தினர் ஒதுக்கிவைத்தனர்.

Update: 2021-07-30 11:13 GMT

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் பெருமாள். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கிராமத்தில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை கைப்பற்றி, அங்கு அம்மா விளையாட்டு மைதானத்தை அமைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து கிராம ஊராட்சி தலைவர் பெருமாள் மற்றும் அவரது உறவினர்கள் என 15 குடும்பத்தினரை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, கச்சாத்தநல்லூர் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், தங்களிடம் வரி வசூல் செய்யப்படவில்லை எனவும், தங்களை ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உறுதி அளித்தார்.

நாட்டான்மை பட பாணியில் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 15 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News