சிவகங்கையில் விடிய விடிய கனமழை: குடியிருப்புக்களில் புகுந்த வெள்ளம்
சிவகங்கையில் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது; குடியிருப்புக்களில் புகுந்த மழை நீரால் மக்கள் அவதிப்பட்டனர்.
சிவகங்கையில், நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்தது. நேற்று இரண்டாவது நாளாக இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இடி மின்னலுடன் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, சிவகங்கை நகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையால், குடியிருப்புகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. தூய்மைப்பணிக்காக தோண்டப்பட்ட கால்வாய்களை மூடாததால், வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதனிடையே, சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், அதிமுக நிர்வாகிகள் உதவியுடன், சிவகங்கை நகராட்சி பணியாளர்கள், குடியிருப்புகள் புகுந்த மழைநீரை அப்புறப்படுத்தினர். இதேபோல், சிவகங்கை முக்கிய பகுதிகளான காந்தி வீதி , உழவர் சந்தை, சிவகங்கை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மழை பாதிப்பை எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.