மாதாந்திர கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களிடையே மோதல்

காளையார்கோவில் ஒன்றிய மாதாந்திரக் கூட்டத்தில் இரு அதிமுக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு.

Update: 2021-08-13 08:46 GMT

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அடித்துக் கொண்ட அதிமுக உறுப்பினர்கள்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 19 வார்டுகளில் அதிமுக கூட்டணியில் 10 உறுப்பினர்களும், திமுக கூட்டணியில் 9 உறுப்பினர்களும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய உடன் 13வது வார்டு அதிமுக உறுப்பினர் மகேஷ்வரன், ஊராட்சி ஒன்றியதலைவி ராஜேஷ்வரி ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகவும், 16வது வார்டு உறுப்பினராக இருந்து வரும் அதிமுக உறுப்பினர் மனோகரனுக்கே ஒப்பந்தம் கொடுத்து தன்னை புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டு கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனோகரனுக்கும், மகேஷ்வரனுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். கீழே கிடந்த சேர்களை தூக்கி தாக்கிக் கொள்ள முயன்றனர். இதனால் கூட்ட அரங்கம் பரபரப்பான நிலையில், பாதுகாப்பிற்காக போலீசார் வரவழைக்கப்பட்டு,மற்ற உறுப்பினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.

இருப்பினும் மகேஸ்வரன் தனது கோரிக்கைகளை நிறைவேற்றகோரி கூட்ட அரங்கில் கீழே அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனையடுத்து அதிகாரிகள் சமாதானத்திற்கு பின்பு கூட்டம் அமைதியாக முடிக்கப்பட்டது. அதிமுக உறுப்பினர்களே தங்களுக்குள் மோதிக் கொண்ட சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News