வைரலான மாற்றுத்திறனாளிகள் திருமணம்

Update: 2021-01-27 08:30 GMT

சிவகங்கை அருகே 3 அடி உயரமே உடைய மாற்றுத்திறனாளிகளின் காதல் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் திருமணம் முடித்த தங்களில் ஒருவருக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கருப்பு (25). 3 அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளி ஆவார். இவரது தந்தை ஜெயபாண்டி. கட்டிட தொழிலாளி. தாய் ஆனந்தவள்ளி இருதய நோயாளியாக உள்ள நிலையில் தனது மூத்த மகனான சின்னக்கருப்புவிற்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என பெற்றோர் ஆசைப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் வரன் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் உயரத்தை காரணம் காட்டி பலரும் பெண் தர மறுத்துள்ளனர். இதற்கிடையே சின்னக்கருப்பு 9 ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ளதால் கிடைக்க கூடிய வேலைகளை செய்து வந்துள்ளார்.

இதில் கட்டிட தொழிலுக்காக தனது திருமணமான சகோதரியின் கிராமமான மதுரை மாவட்டம், மேலூர் அருகேவுள்ள பஞ்சம்தாங்கிபட்டி சென்ற போது அங்கே வைத்து தன்னை போலவே உயரம் குறைவான மாற்றுத்திறனாளி பெண்ணான பஞ்சுவை பார்த்துள்ளார். பார்த்தவுடன் இருவருக்கும் பிடித்து போக இருவரது வீட்டிலும் இது குறித்து தெரிவித்த நிலையில் இரு வீட்டாரும் முதலில் சம்மதிக்கவில்லை என்றாலும் பின்னர் சம்மதிக்கவே நேற்று சின்னக்கருப்புவின் கிராமமான ஒக்கூரில் உள்ள கோவிலில் திருமணம் நடந்து முடிந்தது.

இந்த திருமணத்தை காண வந்தவர்கள் இதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நிலையில் அந்த வீடியோ தற்சமயம் வைரலாகி உள்ளது. இந்நிலையில் இந்த மாற்றுத்திறனாளி புதுமண தம்பதிகள் தங்கள் இருவரில் ஒருவருக்கு அரசு வேலை ஏதேனும் வழங்கினால் தங்களுக்கு பேருதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News